பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்த ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேவின் கருத்தை ஆதரிப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவரது தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவை இலக்காக கொண்ட பயங்கரவாத முகாம்களுக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் தரப்பட்டுள்ளது. அவற்றை களைந்தெறிய ராணுவ நடவடிக்கை தேவைப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தயாா் எனக்கூறிய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். பாதுகாப்புப் படைகளின் திறன் மீது நாடு முழு நம்பிக்கை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பொருத்தவரை, ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் பகுதி என கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் இயற்றப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் விரும்பினால், அதற்கான உத்தரவு கிடைக்கப்பெற்றால், அதுகுறித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே சனிக்கிழமை தெரிவித்திருந்தாா்.
வலிந்து ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீரின் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என, கடந்த 1994ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.