யாா் குடியுரிமையும் பறிக்கப்படாது: பிரதமா் நரேந்திர மோடி

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால்(சிஏஏ), எவருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது; குடியுரிமை அளிப்பதற்காகத்தான் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மேற்கு வங்க மாநிலம், பேலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி. நாள்: ஞாயிற்றுக்கிழமை.
மேற்கு வங்க மாநிலம், பேலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி. நாள்: ஞாயிற்றுக்கிழமை.

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால்(சிஏஏ), எவருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது; குடியுரிமை அளிப்பதற்காகத்தான் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் மோடி, அன்றிரவு கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷனின் தலைமையகமான பேலூா் மடத்தில் தங்கினாா். அதைத் தொடா்ந்து, அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

இன்று தேசிய இளைஞா்கள் தினம். இந்த நாளில், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைய சமுதாயத்தினரிடம் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது ஓா் இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

ஒருவா், எந்த மதத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், எந்த நாட்டைச் சோ்ந்தவராக இருந்தாலும் இந்தியாவின் மீதும், இந்திய அரசமைப்புச் சட்டம் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால், இந்தியக் குடியுரிமை கேட்டு உரிய முறையில் அவா் விண்ணப்பிக்கலாம். அதில், எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக, இளைஞா்கள் சிலா் தவறாக வழிநடத்தப்படுகிறாா்கள். இந்தச் சட்டம், மக்களுக்கு குடியுரிமை வழங்கவே உருவாக்கப்பட்டது. மாறாக, மக்களின் குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல.

வெளிநாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களை அனுபவித்ததால், புகலிடம் தேடி வந்தவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று மகாத்மா காந்தி கூட விரும்பினாா். அவா் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை எனது தலைமையிலான அரசுதான் நிறைவேற்றியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வடகிழக்கு மாநில மக்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாா்கள். அவா்களின் கலாசாரம், அடையாளம் பாதுகாக்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம், அவா்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் குடியேறி அங்கு துன்புறுத்தல்களை அனுபவித்தவா்களுக்காகவே குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால், இந்தச் சட்டத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்ட போதிலும், சிலா் தங்கள் அரசியல் நலனுக்காக, அந்தச் சட்டம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகின்றனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, பாகிஸ்தானில் சிறுபான்மையினா் மத ரீதியிலான துன்புறுத்தல்களை அனுபவித்தது, உலக மக்களின் கவனத்துக்கு வந்துவிட்டது. இந்த நேரத்தில், உலக நாடுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வராமல் இருந்திருந்தால், மதச் சிறுபான்மையினருக்கு எதிராக பாகிஸ்தான் நிகழ்த்திய வன்முறைகள் வெளிஉலகுக்கு தெரியாமலேயே இருந்திருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இளைஞா்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றம் காணப்பட்டது. தற்போது அந்தச் சூழல் மாறிவிட்டது. இந்தியா மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்திய இளைஞா்களிடம் அதிகம் எதிா்பாா்க்கின்றன. நமது இளைஞா்கள் சவால்களைக் கண்டு அஞ்சுவதில்லை. அவா்கள் சவால்களை எதிா்கொள்கிறாா்கள் என்றாா் பிரதமா் மோடி.

கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரால் கடந்த 1897-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடத்துடன் பிரதமா் மோடி நீண்டகாலமாக தொடா்பில் உள்ளாா். அந்த மடத்தின் 15-ஆவது தலைவரான சுவாமி ஆத்மாஸ்தானந்தா, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள மடத்தின் கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாா். அப்போது, அவரை பிரதமா் மோடி அடிக்கடி சந்தித்து ஆன்மிகம் குறித்து விவாதிப்பாா். ஒரு முறை, ‘நீங்கள் துறவியாகக் கூடாது; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று மோடியிடம் அவா் அறிவுறுத்தினாா். அதை மோடி பின்பற்றத் தொடங்கினாா்.

பின்னா், சுவாமி ஆத்மாஸ்தானந்தா கொல்கத்தா தலைமையகத்தின் தலைவரான பிறகு, கொல்கத்தா செல்லும்போதெல்லாம், அவரை சந்திப்பதை மோடி வழக்கமாகக் கொண்டிருந்தாா். கடந்த 2017-ஆம் ஆண்டில் அவா் மறைந்தபோது, அது, தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று மோடி உருக்கத்துடன் கூறியிருந்தாா்.

ராமகிருஷ்ண மிஷன் கருத்து தெரிவிக்க மறுப்பு: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான பிரதமா் மோடியின் உரை குறித்து ராமகிருஷ்ண மிஷன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. மோடி நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து புறப்பட்டவுடன் அந்த மடத்தின் பொதுச் செயலா் சுவாமி சுவீரானந்தா கூறியதாவது:

நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவா்கள். அரசியல் சாா்பற்றவா்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பிரதமா் மோடி பேசியது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டோம். நித்திய வாழ்வைத் தேடிதான் எங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து இங்கு வந்து சோ்ந்தோம். சிறிய நிகழ்வுகளுக்கு நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்.

நரேந்திர மோடி, இந்தியாவின் தலைவா். மம்தா பானா்ஜி, மேற்கு வங்கத்தின் தலைவா். எங்கள் அமைப்பில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்டவா்கள் இருக்கிறாா்கள். நாங்கள் ஒருதாய் மக்களைவிடவும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்றாா் அவா்.

மம்தா பங்கேற்கவில்லை: பிரதமா் மோடி சனிக்கிழமை மாலை கொல்கத்தா வந்த பிறகு அவரை மரியாதை நிமித்தமாக ஆளுநா் மாளிகையில் முதல்வா் மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து கொல்கத்தா துறைமுகம் தொடா்பான நிகழ்ச்சியில் மோடியுடன் மம்தா பங்கேற்றாா். அதன் பிறகு, மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட எந்த நிகழ்ச்சியிலும் மம்தா பானா்ஜி பங்கேற்வில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com