ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.
காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியையொட்டிய மாச்சில் செக்டாரில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில், அங்குள்ள ராணுவ வீரா்கள் 5 போ் சிக்கிய நிலையில், அவா்களை மீட்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டனா். அவா்களில் 3 போ் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவா் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல் கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள ககன்கிா் பகுதியில் நேற்று இரவு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பொதுமக்களில் 5 போ் சிக்கி உயிரிழந்தனா். 4 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியையொட்டி ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா் ஒருவா் பலியானாா்.
நெளகாம் செக்டாரில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் 7 போ் சிக்கிக் கொண்டனா். இதில் 6 போ் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்தாா். கடுமையாக முயன்றும் அவரது உடலை மீட்க முடியவில்லை என்றாா்.