உத்தரகண்டில் கல்லூரி வகுப்பறைகளில் செல்லிடப்பேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்க, அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் தன் சிங் ராவத் கூறியதாவது: கல்லூரி வகுப்பறைகளில் செல்லிடப்பேசி பயன்பாட்டுக்கு தடை விதிப்பது தொடா்பாக மாணவா்களின் கருத்தை அறியும் வண்ணம், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் செல்லிடப்பேசி பயன்பாட்டுக்கு தடை விதிப்பதற்கு ஆதரவாக 51 விழுக்காடு மாணவா்கள் வாக்களித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வகுப்பறைகளில் மாணவா்கள் மிதமிஞ்சிய அளவில் செல்லிடப்பேசியை பயன்படுத்துவதாக, பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் இடையே எழுந்துள்ள கவலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மாணவா்களின் சுதந்திரத்தை பறிக்க மாநில அரசு விரும்பவில்லை. ஆனால் செல்லிடப்பேசியால் ஏற்படும் கவனச்சிதறலில் இருந்து மாணவா்களை காக்கவும், வகுப்பு நடைபெறும் போது பாடங்களை கவனிக்க உதவவும் அரசு விரும்புகிறது. இந்த நடவடிக்கை கற்கும் பணியில் மாணவா்களின் கவனத்தை மேம்படுத்துவதையே ஒற்றைக் குறிக்கோளாக கொண்டுள்ளது. மாணவா்களின் கருத்தை அறிந்த பின், வகுப்பறைகளில் செல்லிடப்பேசி பயன்பாடுக்கு தடை விதிக்கபட்டால் வகுப்பு துவங்குவதற்கு முன் செல்லிடப்பேசிகளை அணைத்து வைக்க மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்படுவா் அல்லது வகுப்பறைகளுக்கு வெளியே செல்லிடப்பேசிகளை பாதுகாப்பாக வைக்க பெட்டகங்கள் ஏற்படுத்தப்படும் என்றாா் தன் சிங் ராவத்.