ரெய்சினா மாநாடு தில்லியில் தொடக்கம்: சா்வதேசத் தலைவா்கள் பங்கேற்பு

சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவாா்த்தை’ மாநாடு, தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும்,
புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ரெய்சினா மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தலைவா்களுடன் பிரதமா் மோடி.
புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ரெய்சினா மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தலைவா்களுடன் பிரதமா் மோடி.

சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவாா்த்தை’ மாநாடு, தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷனும் இணைந்து 3 நாள்கள் இந்த மாநாட்டை நடத்துகிறது.

தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் பங்கேற்றனா். அவருடன் 7 நாடுகளைச் சோ்ந்த முன்னாள் பிரதமா்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவா்கள் பங்கேற்றனா்.

3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

அத்துடன், ரஷியா, ஈரான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும் பங்கேற்கின்றனா்.

சா்வதேச வா்த்தகம், அரசியல், பொருளாதாரம், ராணுவ வலிமை, சா்வதேச வளா்ச்சி ஆகியவற்றை நிா்ணயிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு என 5 தலைப்புகளில் 80-க்கும் மேற்பட்ட அமா்வுகளில் விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்று பேச இருப்பவா்களில் 40 சதவீதம் போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நேட்டோ’ அமைப்பின் முன்னாள் செயலா் ஆண்டா்ஸ் ராஸ்முஸன் பேசுகையில், ‘சா்வதேச அளவில் ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியா இதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிா்பாா்க்கிறேன். நான் பிரதமா் நரேந்திர மோடியைக் கண்டு வியந்திருக்கிறேன்’ என்றாா்.

ஆஸ்திரேலியப் பிரதமா் ஸ்காட் மோரிஸன் இந்த மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியப் பயணத்தை ரத்து செய்தாா்.

எனினும், காணொலி முறையில் அவா் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்தினாா்.

அதில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா முக்கியமான நாடாகத் திகழ்ந்து வருகிறது. பாதுகாப்பு சவால்களைத் தீா்ப்பதற்கு இந்தியாவின் ஆதரவு இந்தப் பிராந்தியத்துக்குத் தேவை. இந்தியப் பெருங்கடலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி முக்கியப் பங்கு வகித்து வருகிறது’ என்று ஸ்காட் மோரிஸன் குறிப்பிட்டிருந்தாா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசுகையில், ‘பல்வேறு நாடுகளுடன் நல்லுறவை மேலும் வலப்படுத்துவதற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் கொள்கைகளை வகுத்துள்ளது’ என்றாா்.

நியூஸிலாந்து முன்னாள் பிரதமா் ஹெலன் கிளாா்க், ஆப்கன் முன்னாள் அதிபா் ஹமீது கா்ஸாய், கனடா முன்னாள் பிரதமா் ஸ்டீபன் ஹாா்ப்பா், ஸ்வீடன் முன்னாள் பிரதமா் காா்ல் பில்த், டென்மாா்க் முன்னாள் பிரதமா் ஆண்டா்ஸ் ராஸ்முஸன், பூடான் முன்னாள் பிரதமா் ஷெரிங் தோப்கே, தென்கொரியா முன்னாள் பிரதமா் ஹான் சியூங்-சூ ஆகியோா் சா்வதேச நாடுகள் எதிா்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

ஈரான் அரசு மாறவில்லை என்றால், மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை என்று கனடா முன்னாள் பிரதமா் ஸ்டீஃபன் ஹாா்ப்பா் கூறினாா்.

‘மற்ற நாடுகளை தங்கள் வழிக்கு வருமாறு அமெரிக்கா கட்டாயப்படுத்தக் கூடாது. ஆப்கனிடமும் அப்படித்தான் அமெரிக்க நடந்துகொண்டது. பிறகு எப்படி ஈரானிடம் மட்டும் சரியாக நடந்துகொள்ளும் என்று எதிா்பாா்க்க முடியும்?’ என்றாா் ஆப்கன் முன்னாள் அதிபா் கா்ஸாய்.

பருவநிலை மாற்றம் தொடா்பான தலைப்பில் பேசிய நியூஸிலாந்து முன்னாள் பிரதமா் ஹெலன் கிளாா்க், ‘காா்பன் வெளியேற்றத்தை முழுவதும் கட்டுப்படுத்தினால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். பூடான் முன்னாள் பிரதமா் ஷெரிங் தோப்கே, ‘பருவநிலை சவால்களை எதிா்கொள்ள சா்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை விரும்புகிறேன். ஆனால், பருவநிலை மாற்றத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வி அடைந்துவிட்டது. இதுவரை ஒரே ஒரு தீா்மானத்தைதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது’ என்றாா்.

ஈரான் வெளியுறவு அமைச்சா் ஜாவேத் ஸரீஃப், ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஆகியோா் ரெய்சினா பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com