புவனேஸ்வர்: மும்பை - புவனேஸ்வர் இடையே இயக்கப்படும் லோகமான்ய திலக் விரைவு ரயில் ஒடிஸா மாநிலம் கட்டாக் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.
முன்னதாக விபத்து குறித்து செய்தி வெளியிட்ட ரயில்வே அதிகாரிகள், 25 பயணிகள் காயம் அடைந்ததாக தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகு, 4 ரயில் பயணிகள் படுகாயம் அடைந்திருப்பதாகவும், 11 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பயணிகள் கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், யாருக்கும் உயிர் ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனி மூட்டம் காரணமாக இன்று காலை 7 மணியளவில், சலகோன் மற்றும் நெற்குண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இவ்விரு ரயில்களின் ஸ்பீட் மீட்டர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் வந்த பயணிகள் மாற்று வழிகளில் உரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடந்து வருகிறது.
இந்த ரயில் விபத்தால், அவ்வழியாக வந்த 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விபத்து நிகழ்ந்த உடனே, அருகில் இருந்த ஊர் மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகளில் மீட்புப் படையினருடன் இணைந்து செயல்பட்டனர். அவர்களுக்கு கிழக்கு மண்டல ரயில்வே நன்றி தெரிவித்துள்ளது.