ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் கந்துவா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாநிலங்களவை எம்பி.,யும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தோனேஷியா ரூபாய் நோட்டுகளில் விநாயகர் கடவுளின் படம் அச்சிடப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில்,
விநாயகர் தடைகளை நீக்குபவர். அதேபோன்று இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அதன்மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்புள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் பதில் அளிக்க வேண்டும். இதனால் யாரும் வருத்தமடைய வேண்டாம் என்றார்.
மேலும் குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில்,
குடியுரிமைச் சட்டத்தில் எந்த தவறும் இல்லை. மகாத்மா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தான் இதனை வலியுறுத்தியது. குடியுரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி மன்மோகன் சிங், 2003-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அதை தான் பாஜக அரசு தற்போது அமல்படுத்தியுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன. இதில் என்ன தவறு உள்ளது? இந்தியாவுக்கு வர மறுக்கும் பாகிஸ்தான் முஸ்லிம்களை நம்மால் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.