'நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல' என்று கேரள அரசுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதில் அளித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து கேரள அமைச்சரவை அளித்த அவசரச் சட்டத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கையெழுத்திட மறுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் பதிலளித்ததாவது,
நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டுமே இருப்பதற்கு ஜனநாயகம் ஒப்புக்கொள்ளாது. எனக்கென்று மூளை உள்ளது. மாநில அரசின் ஒவ்வொரு முடிவிலும் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு அவசரச் சட்டத்தின் போதும் அதில் உள்ளவற்றை தெரிந்துகொள்ள போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது.
சட்டப்பேரவை விரைவில் கூடவுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை அதிகரிக்கும் அவசரச் சட்டத்துக்கான தேவை எதற்கு ஏற்பட வேண்டும்? இதுதொடர்பான கேள்விகளை எழுப்பி, அதற்கான விளக்கங்களை மாநில அரசிடம் கோரியுள்ளேன். அதன் பிறகு இந்த விவகாரத்தில் யோசித்து முடிவு எடுக்கப்படும்.
இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று ஒருபோதும் கூறவில்லை என்று தெரிவித்தார்.