உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின் உன்னாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
3 மாதங்களாக வழக்கை விசாரித்த தில்லி மாவட்ட நீதிமன்றம் 'பாலியல் வன்கொடுமை வழக்கில் ' போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி' என அறிவித்து, ஆயுள் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆயுள் தண்டனையை எதிர்த்து, குல்தீப் சிங் செங்கார் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.