சட்டப்பிரிவு 254-ன்படி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பங்கேற்றுப் பேசினார். அப்போது,
"போராட்டங்கள் நடைபெறுவது ஒன்றும் முதன்முறையல்ல. இதற்கு முன்பும் போராட்டங்கள் அரங்கேறியுள்ளன. அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளது. நம்முடையக் கருத்தில் உறுதியாய் இருப்பதற்கு நமக்கும் உரிமை உள்ளது. ஆனால், சட்டங்களை மீற நமக்கு உரிமை கிடையாது.
தர்க்கத்தின் அடிப்படையில் வேண்டுமானால் உச்சநீதிமன்றத்துக்குச் செல்லலாம். சிஏஏ மத்திய அரசு விவகாரமாகும், மாநில அரசுகளின் விவகாரம் அல்ல" என்றார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,
"சிஏஏவை அமல்படுத்த வேண்டும். இதை அமல்படுத்துவதைத் தவிர வேறு எந்தவொரு வாய்ப்பும் கிடையாது. சட்டப்பிரிவு 254-ன்படி மாநிலங்களால் சிஏஏ அமல்படுத்தப்பட வேண்டும்" என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள மற்றும் பஞ்சாப் அரசுகள் தங்களுடைய சட்டப்பேரவைகளில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.