புது தில்லி: மத்திய நிதியமைச்சகத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
அல்வா வழங்கி, மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடக்கி வைக்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறது.
இந்த நிலையில், 2020-2021ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு மரபுப்படி, அல்வா வழங்கப்பட்டு, அச்சடிப்புப்பணி இன்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி தில்லியில் மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்றது. பட்ஜெட் அச்சடிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி, அச்சடிப்புப் பணியைத் தொடக்கி வைத்தார்.
ஆண்டுதோறும் பொது பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணி, அல்வா பூஜையுடன் தொடங்கப்படுவது வழக்கம். பூஜைக்குப் பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் வரை அமைச்சகத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது.
தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலமாகவும் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும், முக்கிய அதிகாரிகள் மட்டும் வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.