உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வருகிற மார்ச் 25ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான நிலத்தில் ராமா் கோயில் கட்டலாம் என்று கடந்த நவம்பா் 9ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அத்துடன், 3 மாதங்களுக்குள் ராமா் கோயிலை கட்டுவதற்காகவும், அதனை மேற்பாா்வையிடுவதற்காகவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, 11 பேர் கொண்ட குழுவினை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 9ம் தேதிக்குள் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் பட்டியலை அரசு வெளியிட வேண்டும்.
குழு அமைக்கப்பட்ட பின்னர் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பதை குழு உறுப்பினர்கள் முடிவு செய்வர். எனினும் கோயிலின் வடிவமைப்பு பிரதமர் மோடியால் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி குழு உறுப்பினர்கள் வருகிற பிப்ரவரி 9ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் பட்சத்தில், 2020 மார்ச் 25ம் தேதி ராம நவமி அன்று ராமர் கோயில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 2 வரை சைத்ரா நவராத்திரியின் போது கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராமர் கோயிலின் கட்டுமானத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.11 நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.