தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறார்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 21. பிப்ரவரி 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவிருந்தார். அதற்கு முன்னதாக புதுதில்லி சட்டமன்றத் தொகுதியில் பேரணியொன்றை நடத்தினார். ஏராளமான தொண்டர்களுடன் திறந்த வேனில் நின்றபடி மக்களைச் சந்தித்து பேசினார். இதனால் தாமதம் ஏற்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கலை இன்றைய (ஜனவரி 21) தினத்திற்கு ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, தில்லி ஜாம் நகர் அலுவலகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் வந்தார். அவருடன் அவரது பெற்றோர்களும் வந்திருந்தனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய அவர் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது வேட்பு மனுவை தாக்கல் செய்யக் காத்திருக்கிறேன். எனது டோக்கன் எண் 45. வேட்பு மனு தாக்கல் செய்ய இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஜனநாயகத்தில் பலர் பங்கேற்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.