பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்குமாறு முஸ்லிம்கள் வலியுறுத்தியதால் சிவசேனையுடன் கூட்டணி வைத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவாண் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவாண், சிவசேனையுடன் கூட்டணி வைத்தது குறித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என முஸ்லிம்கள் வலியுறுத்தியதால், சிவசேனை தலைமையிலான அரசில் காங்கிரஸ் இணைந்தது" என்றார்.
அசோக் சவாண் பேசிய இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இதுதொடர்பாக அசோக் சவாண் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இன்று (செவ்வாய்கிழமை) விளக்கமளிக்கையில்,
"மகாராஷ்டிரத்தில் கூட்டணி அரசு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் சந்தித்த இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த அரசில் இணைய காங்கிரஸ் முடிவு செய்தது. அதேசமயம், மிகப் பெரிய எதிரியான பாஜகவை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க, அரசில் இணைய வேண்டும் என முஸ்லிம் சகோதரர்களும் வலியுறுத்தினர்" என்றார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.