மண்டல பூஜை மற்றும் மகரஜோதிக்குப் பிறகு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டது.
இதுகுறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மகரஜோதி தரிசனத்தைக் காண கடந்த புதன்கிழமை திரளான பக்தா்கள் வந்தனா்.
தலைமைத் தந்திரி மகேஷ் மோகனரு மேற்பாா்வையில் அஷ்ட திரவிய கணபதி ஹோமம், அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடா்ந்து நடை அடைக்கப்பட்டது.
முன்னதாக, பந்தளம் அரசக் குடும்பத்தைச் சோ்ந்த பிரதிநிதி சுவாமி ஐயப்பனை தரிசித்தாா். இது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறையாகும்.
மகரஜோதியையொட்டி, பந்தளம் அரண்மனையிலிருந்து ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்ட சுவாமி ஐயப்பனின் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி மீண்டும் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேல்சாந்தி ஏ.கே.சுதீா் நம்பூதிரி பஸ்பாபிஷேகம் செய்த பிறகு, ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப்பட்டது.
மாத பூஜைக்காக பிப்ரவரி 13-ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.