ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் அமராவதியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை, ஏழை மக்கள் வாங்கியிருப்பது தொடர்பான மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நில மோசடி குறித்து ஆந்திர காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிஐடி காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மிகவும் வறுமை நிலையில் இருக்கும் சுமார் 800 குடும்பங்கள் அமராவதியில் ரூ.220 கோடி மதிப்பிலான நிலங்களை 2014 - 15ம் ஆண்டுகளில் வாங்கியுள்ளனர்.
இது குறித்து வருமான வரித்துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் தகவல் தெரிவித்திருக்கும் சிஐடி காவல்துறை, இந்த விவகாரத்தில் வரி ஏய்ப்பு அல்லது பணமோசடி நடந்திருக்கிறதா என்பதை விசாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை வாங்கியிருக்கும் ஏழைகளிடம் பான் அட்டை கூட இல்லை. இவர்கள் வருமான வரியும் செலுத்தியது கிடையாது என்பதே.