தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்நாட்டு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து இன்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் குறித்த எந்த பாதிப்பும் இல்லை.
மத்திய அரசின் 3 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறையும் தினந்தோறும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. கரோனா வைரஸ் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முழு கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.