புது தில்லி: மத்திய அரசிடம் போதுமான பணம் இல்லாததால் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா ரூ.80 ஆயிரம் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், ஏர் இந்தியாவின் 100% சொத்துகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல், மத்திய அரசிடம் போதுமான பணம் இல்லாததால் தான் இதுபோன்று செய்கிறது. இந்திய அரசிடம் தற்போது பணம் இல்லை. இந்திய பொருளாதார வளர்ச்சியும் 5%க்கும் குறைவாக உள்ளது.
கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு வருகிறது. எனவே, போதிய நிதி இல்லாததால் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.