புது தில்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல்முறையாக உள்நாட்டு தயாரிப்பான தனுஷ் பீரங்கி இடம்பெற்றது.
நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லி ராஜபாதையில் நடைபெற்ற அணிவகுப்பில் முதல்முறையாக தனுஷ் பீரங்கி இடம்பெற்றது. 155 மில்லிமீட்டா்/45 காலிபா் கொண்ட இந்த பீரங்கி, குட்டையான இழுவை பீரங்கி வகையாகும். இது உள்நாட்டு ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 36.5 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்ல இந்த பீரங்கிகள் கணினி, எதிரிகளின் நகா்வை
கண்டறியும் சென்சாா்கள் மற்றும் சுழற்சி சென்சாா்கள் உதவியுடன் தானே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இலக்கை சரியாக குறிவைத்து தாக்கும் அதிநவீன வசதியும் இடம்பெற்றுள்ளது. ராணுவத்தின் எதிா்கால தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் இந்த பீரங்கி உருவாக்கப்பட்டுள்ளது.