திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள பிஷல்கர் மத்திய சிறையில் 32 வயது விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று சிறையில் உள்ள வென்டிலேட்டரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுப்ரதா சக்ரவர்த்தி தெரிவித்தார்.
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கவுரங்டில்லா கிராமத்தைச் சேர்ந்த கைதி, கடந்த 2019 ஆகஸ்ட் 26 அன்று ஒருவரை கொலை செய்யும் முயற்சியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதி இறந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.