இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் கொல்கத்தாவில் அமைய உள்ளது. இப்பணிகள் 2022ல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வேயிடம் இருந்து இந்த திட்டத்துக்கான இறுதித் தொகையைப் பெற கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் காத்திருக்கிறது. அந்த தொகை வந்துவிட்டால், 2022ம் ஆண்டுக்குள் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவு பெற்று விடும் என்று கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் ஹூக்ளி நதியின் கீழ் இந்த மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படுகிறது. அங்குதான் மிகப் புகழ்பெற்ற ஹௌரா பாலம் உள்ளது.
இந்த ரயில் திட்டம் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் தினமும் 9 லட்சம் பேர் இதில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 520 மீட்டர் தூரமுள்ள நீருக்கடியில் சுரங்க ரயில் பாதை வழித்தடத்தை பொதுமக்கள் ஒரு சில நொடிகளில் கடந்து விடுவார்கள். தற்போது இதே ஹூக்ளி ஆற்றை படகு மூலம் கடக்க 20 நிமிடங்களும், ஹௌரா பாலம் மூலம் கடக்க ஒரு மணி நேரமும் ஆகிறது.
இந்த ரயில் திட்டம் நிறைவு பெற்றால், நாட்டிலேயே ஒரு ஆற்றை நீருக்கடியில் கடக்கும் முதல் ரயில் பாதையாக இது அமையும்.