சீனாவில் பயின்று வரும் மேகலாயா மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் திட்டம் தற்போது இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் முக்கிய நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதுமே பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படா வண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் வுஹான் நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர ஜனவரி 31ம் தேதி ஏர் இந்தியா விமானம் செல்கிறது.
இதுகுறித்து பேசிய மேகாலயா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.எல் ஹெக் கூறுகையில், 'கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பயின்று வரும் மேகலாயா மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் திட்டம் இல்லை. எனினும், மத்திய அரசின் திட்டம் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை
மேகாலயாவில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் தாக்கம் இல்லை. யாருக்கேனும் கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த சந்தேகம் ஏற்பட்டால் முறையாக சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.