புது தில்லி: கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனையில் அனுமதித்து, மகப்பேறு சிகிச்சை அளிக்கவோ, அறுவை சிகிச்சை செய்யவோ, தற்போதைய மிக அவசரகால நிலையில், கரோனா பரிசோதனை செய்திருப்பது கட்டாயமல்ல என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு வந்தால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்க வேண்டும் என்றும், அதே சமயம் அவருக்கு கரேனா பரிசோதனையையும் மேற்கொண்டு, ஒரு வேளை அதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால், கரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கான பிரிவுக்கு அவரை அனுப்பலாம் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஒரு அவசரகாலக்கட்டத்தில், கர்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனையைக் காரணம் காட்டி சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்பதால், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வரும் போது அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.