பெங்களூரு: 43 வயது நபர் நெஞ்சு வலி மற்றும் இருமலுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நிலையில், 9 மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸிலேயே மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஆம்புலன்ஸிலேயே அந்த நபரை வைத்துக் கொண்டு குடும்பத்தினர் மருத்துவமனைகளுக்கு அலைந்த நிலையில், புதன்கிழமை காலை அவர் சிகிச்சை பெறாமலேயே மரணம் அடைந்துள்ளார்.
இது பற்றி அவரது உறவினர் கூறுகையில், எனது மனைவியின் மாமா, கார் ஓட்டுநர். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நெஞ்சலி அதிகரித்து, இருமலும் சேர்ந்து கொண்டது. நள்ளிரவில்தான் ஆம்புலன்ஸ் வந்தது. சுமார் 9 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றோம். ஆனால், அனைத்து தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும் நிரம்பிவிட்டதாகக் கூறி மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன.
புதன்கிழமை காலை 6.30 மணிக்கு ஆம்புலன்ஸிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது முக்கியம்தான். அதே சமயம், பிற நோயுடன் வரும் நோயாளிகளின் உயிரைக் காப்பதும் அவசியம் என்று கூறியுள்ளார்.