அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் தரப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் மக்களின் பயன்பாட்டில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் நாம் பதிவிடுவதை எடிட் செய்யும் வசதி உள்ளது.
ஆனால், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை பயன்படுத்தும் ட்விட்டரில் எடிட் வசதி இல்லை. அதாவது பதிவிட்ட பிறகு அதில் திருத்தம் செய்ய முடியாது. மாறாக தவறாக ஏதேனும் பதிவிட்டால் அதனை முழுவதுமாக நீக்கிவிட்டு புதிதாக பதிவிடும் வசதியே உள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைவரும் முகக்கவசம் அணிந்தால் எடிட் ஆப்ஷன் தரப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ட்விட்டர் இந்த பதிவினை வெளியிட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், 'அனைவரும் முகக்கவசம் அணிவது சாத்தியமல்ல; அதேபோன்று ட்விட்டரும் எடிட் ஆப்ஷனை தருவது சாத்தியமல்ல' என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.