ஹைதராபாத்: கரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ 1 லட்சம் கட்டணமாக செலுத்த இயலாத பெண் மருத்துவர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் சுல்தானா. இவருக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்னதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து வீட்டில் தன்னைத்தானே அவர் தனிமைப்படுதிக் கொண்டுளார். அதன்பின்னர் கடந்த 1-ஆம் தேதியன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக சதேர்காட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஒரு நாள் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மறுநாள் 2-ஆம் தேதியன்று அவரை ரூ. 40 ஆயிரத்தை காப்புத் தொகையாக செலுத்துமாறு மருத்துவமனை கூறியுள்ளது, அத்துடன் அவருக்கு ஒரு நாள் சிகிச்சைக் கட்டணமாக ரூ. 1.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்துக் கேள்வி கேட்டு, பணம் செலுத்த இயலாது என்று கூறியபோது அவரை அங்கு ஒரு அறையில் இருக்க வைத்துள்ளனர். அத்துடன் ஞாயிறு அதிகாலையில் ரூ. 1.30 லட்சத்தை கட்டணமாக செலுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக அவரது புகாரை விசாரித்த சதேர்காட் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ், ‘சுல்தானா அந்த மருத்துவமனையில் அடைத்து வைக்கப்படவில்லை; நாங்கள் அங்குள்ள சிசிடிவி பகுதிகளை முழுமையாக ஆராய்ந்து விட்டோம். எனவே அவரது புகாரின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.