கரோனா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி செயல்படுத்தியது உள்ளிட்டவை எதிர்காலத்தில் ஹார்வார்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் தோல்விகளுக்கான ஆய்வுப் பாடங்களாக இடம்பெறும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் இன்று (திங்கள்கிழமை) பதிவிட்டிருப்பதாவது:
"எதிர்காலத்தில் ஹார்வார்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் கரோனா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி செயல்படுத்தியது உள்ளிட்டவை தோல்விக்கான ஆய்வுப் பாடங்களாக இடம்பெறும்."
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் ரஷியாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-ஆம் இடத்தை அடைந்துள்ளது. இந்த நேரத்தில் ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவுடன் விடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அந்த விடியோவில் கரோனா காலத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றிய காட்சியும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, நாளுக்கு நாள் உயர்ந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த புள்ளி விவரக் காட்சியும் இடம்பெற்றுள்ளன.