ஷில்லாங்: அருணாசலப் பிரதேசத்தில் இருந்து எட்டு மாதக் குழந்தை உடல் நலக் குறைபாட்டுக்கு சிகிச்சை பெற அஸ்ஸாம் வழியாக மேகாலயத்துக்கு வந்த நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தை உடல் நலக் குறைவு காரணமாக மேகாலயத்தில் உள்ள இந்திரா காந்தி சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் மண்டல மையத்தில் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதன் பெற்றோர் குழந்தையை சாலை மார்கமாக ஷில்லாங் அழைத்து வந்தனர். திங்கள்கிழமை காலை குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனையை வந்தடைந்தனர். உடனடியாக குழந்தைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையில் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், குழந்தை அன்று மாலையே மரணம் அடைந்துவிட்டதாக மேகாலயா சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.எல். ஹேக் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் பெற்றோர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. மேகாலயத்தில் கரோனாவுக்கு முதல் பலி ஏப்ரல் 15ல் நேரிட்டது. தற்போது வரை 89 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.