ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு உதவியதனால் தேசிய புலனாய்வு முகமையினால் (என்.ஐ.ஏ.) கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் சிங் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் விமான நிலையத்தின் சிறப்புப் பிரிவில் காவல் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்.பி.) பணியாற்றியவர் தேவேந்தர் சிங். இவர் இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு, பாக். ஆதரவு பயங்கரவாதிகளுக்கு உதவி வந்தது கண்டறியப்பட்டது.
சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை வைத்துக் கொண்டு நாட்டுக்கு எதிரான தகவல்களை பயங்கரவாதிகளுக்கு அவர் கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ. அவர் மீதான குற்றப்பத்திரிகையை திங்கள் கிழமை தாக்கல் செய்தது. அவருடன் மேலும் ஐந்து பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் சையத் நவீத் முஸ்தாக் எனப்படும் நவீத் பாபு, அவரது சகோதரர் சையத் இர்ஃபான் அகமது, தலைமறைவு பயங்கரவாதி இர்ஃபான் ஷபி மிர், ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பின் உறுப்பினர் ரஃபி அகமது ரத்தர், வியாபாரியான தன்வீர் அகமது வானி ஆகியோரே அந்த ஐவர் ஆவர்.
கைது செய்ததிலிருந்து 90 நாட்களுக்குள் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், கடந்த மாத இறுதியில், தில்லி நீதிமன்றம் இவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் தேவேந்தர் சிங் மற்றும் ஐவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.