பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அலுவல் இல்லத்தில் தங்கியிருக்கும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்ததாவது:
"பிகார் முதல்வரின் அலுவல் இல்லத்தில் தங்கியிருக்கும் நெருங்கிய உறவினருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் திங்கள்கிழமை வந்தன. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் தனி வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவரது இல்லம் முற்றிலுமாக தூய்மைப்படுத்தப்பட்டது."
முன்னதாக, மாநில சட்டமேலவையின் தலைவர் (பொறுப்பு) அவதேஷ் நாராயண் சிங்குக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜூலை 1-ஆம் தேதி 9 சட்டமேலவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவின்போது பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அவதேஷ் நாராயண் சிங்குடன் உரையாடினார்.
இதைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் உள்பட அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் கடந்த வார இறுதியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் புதிதாகத் தேர்வான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நிதிஷ் குமாரின் பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை இரவு வெளியாகின. இதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.