கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குற்றவாளிகளின் கூடாரமாக அரசியல் மாறியுள்ளதாலும், ஊழல் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாலும் தற்போதைய திரிணமூல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.
ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் விழாவை ஒட்டி கொல்கத்தாவில் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழி பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒன்றுபட்ட இந்தியாவுக்காகவும், லட்சியம் மற்றும் கொள்கைக்காகவும் வாழ்ந்து மறைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை ஒருபுறம் கொண்டாடும் நாம், மறுபுறம் அதிகாரத்தில் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் திரிணமூல் காங்கிரஸ் அரசைப் பெற்றிருக்கிறோம்.
மேற்கு வங்கத்தில் குற்ற அரசியல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அரசுத் திட்டங்களில் பயன் பெறுவதற்கு பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் "கட் மணி' என்ற வார்த்தையை இப்போது நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பாதகங்களை செய்யும் தலைவர்களை அப்புறப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தின் புகழை மீண்டும் நிலைநாட்ட இப்போதுள்ள ஆட்சியை அகற்ற வேண்டும்.
ஒரு காலத்தில் மேற்கு வங்கம் நாட்டை வழிநடத்தியது. சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்கத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார். மாநிலத்தில் கல்வியின் தரம் தற்போது வெட்கப்படும் வகையில் மிகவும் தாழ்ந்துள்ளது. மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள் அதற்கான விளைவை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டும்.
பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகியவை இந்தியாவுடன் இருப்பதற்கு காரணம் சியாமா பிரசாத் முகர்ஜிதான். அவர் இல்லையென்றால் நாடு பிரிவினையின்போது இந்தப் பகுதிகள் பாகிஸ்தானுடன் சேர்க்கப்பட்டிருக்கும். சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேருவின் சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்து முகர்ஜி குரல் கொடுத்தார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் தவறான பழக்கத்தை காங்கிரஸ் கொண்டுள்ளது.
கொள்கைகள் ஒத்துப்போகாததால் நேருவின் அமைச்சரவையில் இருந்து அவர் விலகினார். நேரு - லியாகத் ஒப்பந்தமே சியாமா பிரசாத் முகர்ஜி பதவி விலகுவதற்கு காரணம். ஏனெனில் அந்த ஒப்பந்தம் பாகிஸ்தானில் சிறுபான்மையினரை ஏமாற்றும் விதமாக அமைந்திருந்தது.
ஜம்மு - காஷ்மீருக்கு அரசியல் சட்டம் 370}ன் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையின் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி கேள்வியெழுப்பினார். ஆனால் நேருவும், ஷேக் அப்துல்லாவும் தங்களின் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள சிறப்பு சட்டத்தை இயற்றினர். கூட்டாட்சி தத்துவத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதில் அவர் முனைப்பு காட்டவில்லை என்றார் நட்டா.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் அரசு மீதான நட்டாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அக்கட்சியின் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், "பாஜகவுக்கு வாக்குகள் மட்டுமே முக்கியம். அதனால் பொய் சொல்வதிலிருந்து வரலாற்றைத் திரித்து கூறுவது வரை அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். கல்வி அரசியலாக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். அவர்களின் (பாஜகவினர்) கலாசாரத்தை மேற்கு வங்க மக்கள் மீது திணிக்க முயல்கின்றனர். பாஜகவினர் மக்களைத் தவறாக வழி நடத்த முயல்கின்றனர் என்றார்.