11 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை, முதுகலை முதல் செமஸ்டர் ஆன்லைன் வகுப்புகளுக்கான படிவங்கள் குறித்து மேகாலய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 11 ஆம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை முதல் செமஸ்டர் படிப்புகளுக்கான சேர்க்கை படிவங்கள் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவை இலவசமாக வழங்கப்படும் என்றும் மேகாலயா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து நிரப்பி அரசு அறிவிக்கும் 5 இடங்களில் ஏதேனும் ஒன்றில் சமர்ப்பிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அங்கு ஒரு கவுண்டரில் 40 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படும்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பாதுகாப்பு கருதி இந்த விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் எந்த ஒரு நபரும் முகக்கவசம் இன்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நிறுவன வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே நேரத்தில் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நிறுவனத்தின் நுழைவாயிலில் கை கழுவும் திரவம் மற்றும் கைகளை கழுவுவதற்கு போதுமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டும். அனைவரும் பரிசோதனை செய்து கொண்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். அதேபோன்று கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். வரும் நபர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அளித்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் விபரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.