பஞ்சாபில் இருந்து வந்த மனைவியை, கணவன் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததை அடுத்து, காவல்துறையினர் வந்து சமாதானப்படுத்திய வினோத சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு அல்லது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு சென்றால் அந்தந்த மாநில அரசு விதிமுறைகளின்படி, தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சமீபத்தில் பஞ்சாபிலிருந்து பெண் ஒருவர் தனது சொந்த ஊரான பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். வீட்டை அடைந்தவுடன் அவர் கதவைத் தட்டியபோது, கணவர் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து பலமுறை தட்டியும் கதவைத் திறக்காததால் இறுதியாக அந்த பெண் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பின்னர் காவல்துறையினர் வந்து பெண்ணின் கணவரை சமாதானப்படுத்தி கதவைத் திறக்க வைத்தனர்.
கர்நாடக மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தங்களை 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை அந்த நபருக்கு எடுத்துரைத்து நம்ப வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.