புது தில்லி: வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் இருவரது பிரேதங்கள் இடம் மாறிய சம்பவம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘குறிப்பிட்ட சம்பவம் செவ்வாயன்று நடந்துள்ளது. முதலில் இதுதொடர்பான தகவல் வெளிவந்தவுடன் மருத்துவமனை நுழைவாயிலில் சிறிய அளவில் சச்சரவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஒரு தரப்பினர் பிணத்திற்கு தங்களது மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்திருந்தனர். மற்றொரு தரப்பினரிடம் சரியான பிணம்தான் அவர்களிடம் தரப்பட்டதா என்பதை அறிய பொறுத்திருக்குமாறு மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டது. பின்னர் இரு பினங்களுமே எரியூட்டப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக இரண்டு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
பொதுவாக கரோனாவினால் மரணமடைந்தவர்களின் உடலானது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு, பின்னர் முறைப்படி துணி அல்லது உரிய பொருளால் சுற்றப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பிணத்தினை பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படமாட்டர்கள். ஆனால் இறந்தவரின் அங்க அடையாளங்களை பட்டியலிட்டு அளிக்குமாறு அவர்கள் கேட்டுகொள்ளப்படுவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.