ராஞ்சி: அமைச்சர் மற்றும் எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். முதல்வர் வீட்டுக்கு வெளியில் இருந்து யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்ட மாநில அமைச்சர் மிதிலேஷ் தாக்கூருடன் முதல்வர் தொடர்பில் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, அமைச்சர் தாக்கூர் மற்றும் மஹ்டோ ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னெச்சரிக்கையாக அடுத்த சில நாள்களுக்கு நான் தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் யாரும் கூட்டமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.