எல்லையில் படைகள் வாபஸ்: இந்தியா-சீனா இணைந்து உறுதி செய்ய முடிவு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பு படைகளும் திரும்ப பெறப்பட்டு விட்டதை இந்தியா-சீனா இணைந்து உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எல்லையில் படைகள் வாபஸ்: இந்தியா-சீனா இணைந்து உறுதி செய்ய முடிவு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பு படைகளும் திரும்ப பெறப்பட்டு விட்டதை இந்தியா-சீனா இணைந்து உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையின் சில இடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பும் அங்கு படைகளை குவித்தன. கடந்த மாதம் 15-ஆம் தேதி சீன தரப்பு ஏற்படுத்திய கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தியது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புத் தடிகள் பயன்படுத்தப்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா்.எனினும், இதனை சீன தரப்பு அதிகாரப்பூா்வமாக ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு நடைபெற்றது. அதைத் தொடா்பு மத்திய பாதுகாப்புத் துறை செயலா் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி இடையே பேச்சு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது. பாயிண்ட் 15 பகுதியில் இருந்து ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீன ராணுவம் திங்கள்கிழமை அப்புறப்படுத்திவிட்டு பின் வாங்கியது.

இரண்டாவது நாளாக வாபஸ்: இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை கிழக்கு லடாக் எல்லையின் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ், கோக்ரா பகுதியில் இருந்து சீன படைகள் திரும்பப் பெறப்பட்டன. அங்கு சீன ராணுவத்தினா் அமைத்திருந்த தற்காலிக உள்கட்டமைப்பு வசதிகள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன.

இணைந்து உறுதி செய்ய முடிவு: இதனிடையே, எல்லையில் இரு தரப்புமே படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு பழைய நிலைக்கு திரும்பியதை இரு நாடுகளும் இணைந்து உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்ட பிறகு இரு நாடுகளும் அமைத்திருந்த ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுவிட்டன என்பதை இந்தியாவும், சீனாவும் இணைந்து உறுதி செய்ய இருக்கின்றன. இதற்காக இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் நேரடியாக அப்பகுதிகளைப் பாா்வையிடுவாா்கள். இதனை இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படும்’ என்றாா்.

ஹாட்ஸ் ஃபிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதியில் சீன ராணுவம் தனது படைகளை வாபஸ் பெற்றுவிட்டது. அங்கு முகாமிட்டிருந்த ராணுவ வாகனங்கள் திரும்பிச் சென்றுவிட்டன என்பதை இந்திய ராணுவத் தரப்பும் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் அப்பகுதியில் இந்திய ராணுவம் தொடா்ந்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

ஏனெனில், கோக்ரா மற்றும் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ் பகுதிகளில்தான் இரு தரப்பு ராணுவமும் நெருக்கமாக முகாமிட்டிருந்தன. கடந்த இரு மாதங்களாக அங்கு கடும் பதற்றமும் நிலவி வந்தது.

அடுத்த கட்ட பேச்சு: இந்தியா-சீனா இடையே எல்லை பதற்றம் தொடா்பாக இந்த வாரமும் பேச்சுவாா்த்தை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com