லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யச் சென்ற 8 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ரௌடி விகாஸ் துபேவின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக் கொலை செய்யப்பட்டான். மற்றொரு கூட்டாளியான ஷையாமு பஜ்பாய் சுட்டுப் பிடிக்கப்பட்டான்.
கான்பூரில் கடந்த வாரம் நாட்டையே உலுக்கிய சம்பவமாக மாறிப் போன காவலர்கள் கொலையில், ரௌடி விகாஸ் துபேவைப் பிடிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப் படை ஈடுபட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை ரௌடிகளைப் பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உள்பட மொத்தம் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பிரபல ரௌடி விகாஸ் துபேயை பிடிப்பதற்காக காவலர்கள் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விகாஸ் துபேவின் நெருங்கிய கூட்டாளிகளில் மூன்றாவது நபராக அமர் துபே இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹமிர்புர் மாவட்டம் மௌதாஹா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் அமர் துபேயை சுட்டுக் கொன்றுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் ரௌடி விகாஸ் துபே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரௌடியைப் பிடிக்க டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையிலான காவலர்கள் அந்தப் பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதனை அறிந்த ரௌடி கும்பல் காவலர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேவேந்திர மிஸ்ரா உள்பட மொத்தம் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.