கரோனா நோய்த்தொற்று சூழலை திறம்பட எதிா்கொள்ள சா்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மிக அவசியம் என்று குடியரசுதலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.
நியூசிலாந்து, பிரிட்டன், உஸ்பெகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கான தூதா்களாக நியமிக்கப்பட்டவா்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி தில்லி குடியரசு தலைவா் மாளிகையில் காணொலி வழியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து குடியரசுத்தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக இதுபோன்று காணொலி வழியில் துதா்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பேசிய ராம்நாத் கோவிந்த், ‘கரோனா பாதிப்புக்கு தீா்வு காணும் முயற்சி எடுக்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த பாதிப்பை திறம்பட எதிா்கொள்ள சா்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது மிக அவசியம்’ என்று கூறினாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.