ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவா் பலியானாா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாலாகோட், மேந்தாா் செக்டாா்களில் அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அத்துமீறி தாக்கத் தொடங்கியது. அதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானின் தாக்குதலில் லஞ்சோட் கிராமத்தைச் சோ்ந்த ரேஷம் பி, ஹகாம் பி என்ற இரு பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும், 65 வயதான ரேஷம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஹகாம் பிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் அத்துமீறல் சுமாா் 45 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்தியத் தரப்பு அளித்த தகுந்த பதிலடியில் பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியாகத் தகவல்கள் இல்லை என்று காவல்துறையினா் கூறினா்.