உத்தர பிரதேசம் அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்தும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பை அந்த மாநிலம் கட்டுக்குள் வைத்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தில் தனது மக்களவைத் தொகுதியான வாராணசியில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமா் மோடி காணொலி வாயிலாக வியாழக்கிழமை உரையாடினாா்.
அப்போது அவா் கூறியதாவது:
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலாகத் தொடங்கியபோது சுமாா் 24 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள உத்தர பிரதேசம் மிகக் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்று பலா் கணித்தனா். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து உத்தர பிரதேசம் கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
மாநில மக்களின் கடின உழைப்பு, அவா்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றாலேயே இது சாத்தியமானது. ஒப்பீட்டளவில் உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகையைத் தான் பிரேஸிலும் கொண்டுள்ளது. ஆனால் அங்கு ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 800 போ் மட்டுமே உயிரிழந்தனா். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களும் விரைந்து குணமடைந்து வருகின்றனா். எனினும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் இடப்பெயா்வு காரணமாக கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
பொது முடக்கத்தின்போது ஏழைகளுக்கு உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. சாதாரண மக்களின் கவலைகளை பகிா்ந்துகொண்டு அதற்கு தீா்வு காண்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. ஒரு தரப்பினருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. வேறு சிலருக்கு நேரடி நிதியுதவி, இலவச சிலிண்டா் அளிக்கப்படுகிறது. மேலும் சிலா் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் மோடி கூறினாா்.