புது தில்லி: கரோனா வைரஸ் பரவலால், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
7வது எஸ்பிஐ பேங்கிங் மற்றும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட சக்திகாந்த தாஸ் பேசுகையில், நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கரோனா பாதிப்பால் உற்பத்தி, வேலை வாய்ப்புகளில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றால், நமது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதங்கள் 135 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் ஏற்பட்ட வளர்ச்சிக் குறைவைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.