ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சியான பாஜக முயற்சிப்பதாகவும், அதற்காக தனது எம்எல்ஏக்களுக்கு மிகப்பெரிய தொகையை அளிக்க முன்வந்திருப்பதாகவும் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.
அதே சமயம், எங்களது ஆட்சி நிலையாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, நிச்சயம் ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்யும் என்றும் அசோக் கெலாட் உறுதியாகக் கூறியுள்ளார்.
இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அசோக் கெலாட், ராஜஸ்தானில் எங்களது ஆட்சி நடப்பதை பிரதமர் நரேந்திர மோடியாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதனால் ஏதேனும் பிரச்னையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மத்தியில் இருக்கும் தலைவர்களின் சார்பாக பாஜக தலைவர்கள் சிலர் இங்கே ஒரு விளையாட்டை ஆடுகிறார்கள். எம்எல்ஏக்களுக்கு பணம் விலைபேசப்படுகிறது. ரூ.10 கோடி முன்பணமாகவும், ரூ.15 கோடி ஆட்சி அமைக்கப்பட்டதும் அளிக்கப்படும் என்று பேரம் பேசப்படுகிறது என்றும் கெலாட் கூறியுள்ளார்.
ஆனால், அசோக் கெலாட்டின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக முற்றிலும் மறுத்துள்ளது.