காந்தி நகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘பான்’ கடைகளுக்கு அருகே எச்சில் துப்பப்பட்டிருந்தால் கடைக்காரர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டமானது, மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், அகமதாபாத் நகர கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராஜீவ் குமார் குப்தா தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் முகேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் முகக்கவசம் அணியாமல் இருத்தல் ஆகியவற்றுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் அபராதத் தொகையான ரூ.200-ஐ ரூ.500 ஆக உயர்த்துவது என்றும், அகமதாபாத்தில் ‘பான்’ கடைகளுக்கு அருகே எச்சில் துப்பப்பட்டிருந்தால் கடைக்காரர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை எடுத்துக் கூறியும் மக்கள் தொடர்ந்து இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவதாலேயே இந்த முடிவு என்றும் அவர் விளக்கினார்.