கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மாநில அரசு யாரையும் காப்பாற்றாது என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்ததாவது:
"என்ஐஏ விசாரிக்கட்டும். இந்த விசாரணையின் மூலம், கடத்தலின் பின்னணியில் இருக்கும் அனைத்து பெரிய புள்ளிகளும் வெளியே வரட்டும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இது மிகவும் முக்கியமானது. இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாலும், மேற்கொள்ளட்டும். விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியட்டும்.
ஸ்வப்னா சுரேஷிடம் தொடர்பிலிருந்தது தெரியவந்ததையடுத்து, முதன்மைச் செயலர் பொறுப்பிலிருந்து சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார். ஐடி துறையில் அந்தப் பெண் எப்படி பணியில் அமர்த்தப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்த அரசு கோரியுள்ளது. அவரை இடைநீக்கம் செய்ய வேறு எந்தக் காரணமும் இல்லை. கற்பனையின் அடிப்படையில் அரசால் நடவடிக்கை எடுக்க இயலாது. விசாரணை நடக்கட்டும்.
தற்போது சரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) திறமை வாய்ந்த விசாரணை அமைப்பு. என்ஐஏ-வுக்கு மாநில அரசு அனைத்து உதவியையும் வழங்கி வருகிறது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள எவரையும் மாநில அரசு பாதுகாக்காது. அவர்கள் தொடர்ந்து விசாரிக்கட்டும்." என்றார் பினராயி விஜயன்.