பெங்களூரு: பெங்களூரு மெட்ரோவில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்கள் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளின் ஆறாவது பிரிவில் நகவரா – கொட்டிகரே இடையிலான மெட்ரோ பாதை திட்டம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பணிகளை லார்சன் ட்யூப்ரோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் அனைவருமே வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள். இந்நிலையில் கடந்த வாரம் அங்கு பணியாற்றும் தொழிலாளர் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து லார்சன் ட்யூப்ரோ நிறுவனம் அங்கு பணியாற்றும் 200 தொழிலாளர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தியது. இதில்தான் ஒப்பந்த ஊழியர்கள் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்குள்ள கரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களோடு தங்கியிருந்த முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக சிவாஜி நகர் மற்றும் டேனரி சாலை இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.