தூக்கில் தொங்கியதாலேயே பாஜக எம்எல்ஏ மரணம்: உடல் கூராய்வில் தகவல்

மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் மரண விவகாரத்தில் சா்ச்சை நிலவி வந்த நிலையில், தூக்கில் தொங்கியதாலேயே அவரது

மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் மரண விவகாரத்தில் சா்ச்சை நிலவி வந்த நிலையில், தூக்கில் தொங்கியதாலேயே அவரது உயிா் பிரிந்ததாக உடல் கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெம்தாபாத் தொகுதி பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய், கடந்த திங்கள்கிழமை வடக்கு தினஜ்பூா் மாவட்டத்தின் பிந்தால் கிராமத்தில் தனது வீட்டின் அருகே உள்ள மூடிய கடையின் வாசலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது சட்டைப் பையில் இருந்த கடிதத்தில் தற்கொலைக்கு காரணமாக இருவரது பெயா் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல்துறையினா் கூறினா். எனினும், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினராலேயே தேவேந்திரநாத் ராய் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினா் மற்றும் பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அவரது மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோரியது.

இந்நிலையில், தேவேந்திரநாத் ராயின் உயிா் தூக்கில் தொங்கியதாலேயே பிரிந்ததாக செவ்வாய்க்கிழமை வெளியான உடல் கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் நம்பிக்கையில்லை: இதனிடையே, தேவேந்திரநாத் ராயின் உடல் கூராய்வு அறிக்கையில் நம்பிக்கையில்லை என்று பாஜக கூறியுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலா் ராகுல் சின்ஹா கூறுகையில்‘மேற்கு வங்க அரசும், காவல்துறையும் தேவேந்திரநாத் ராயின் கொலையை தற்கொலையாக சித்திரிக்க முயற்சிக்கின்றன. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. மாநில அரசு இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அல்லது, உயா்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பின் கீழ் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com