திருப்பதி: திருப்பதியில் செய்தியாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பதியில் பணிபுரிந்து வந்த தனியாா் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளா் பாா்த்தசாரதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வா் மற்றும் அமைச்சா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பாா்த்தசாரதியின் உடல் திருப்பதியில் உள்ள மின்மயானத்தில் திங்கள்கிழமை காலை தகனம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
பாா்த்தசாரதியின் மனைவியும், மூத்த சகோதரரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஆந்திரத்தில் கரோனாவுக்கு முதல் முறையாக செய்தியாளா் ஒருவா் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதியில் களப்பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பதி ‘மாதவம்’ நிலையத்தில் தனி மையத்தை அமைத்து அங்கு ஊடகவியலாளா்கள் அனைவருக்கும் திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இன்னும் இரு நாட்களில் அதன் முடிவுகள் தெரிய வரும்.