திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க ஓர் அமைப்பு அல்லது அறக்கட்டளையை உருவாக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு 2011 ஜனவரி 31- ஆம் தேதி அளித்த உத்தரவில் கூறியிருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு 2011 மே 2- ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், கோயிலில் ஏ முதல் எஃப் வரை உள்ள பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை முழுமையாக மதிப்பிடவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், "பி' பாதாள அறையை மட்டும் தமது உத்தரவின்றி திறக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தது. அதன்படி, பல கட்டங்களாக பாதாள அறைகளில் உள்ள தங்கம், வைரம், வெள்ளியால் ஆன நகைகள், கட்டிகள் பரிசோதிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது.
"பி" அறையில் இதைவிட அதிகமான நகைகள் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அந்த அறையில் "விசித்திரமான சக்தி' இருப்பதாகவும், அதை திறக்கக்கூடாது எனவும் மன்னர் குடும்பத்தினரும், கோயில் அர்ச்சகர்களும் கூறியதால், அந்த அறையைத் திறக்க மட்டும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.