ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எஸ்யுஐ மாநிலத் தலைவர் அபிமன்யு புனியா ராஜிநாமா செய்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவி வரும் நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். பைலட் ஆதரவாளர்கள் விஷ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பைலட் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பின் (என்எஸ்யுஐ) ராஜஸ்தான் மாநிலத் தலைவர் அபிமன்யு புனியா ராஜிநாமா செய்துள்ளார். மேலும் இளைஞர் காங்கிரஸ், என்எஸ்யுஐ மற்றும் சேவா தளத்திலிருந்து 400 முதல் 500 பேர் வரை ராஜிநாமா செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.