புது தில்லி: உத்தரப்பிரதேசத்தில் ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டா் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் சூசகமாகத் தெரிவித்துள்ளது.
ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டா் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும், அம்மாநிலத்தில் குற்றவாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் இடையிலான தொடர்பு குறித்து விரிவாக ஆராயவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை செவ்வாயன்று தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உ.பி மாநில அரசின் சார்பாக அனுமதி கேட்டு ஆஜரானார். அவர் இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதுடன், வியாழன்று அதனைத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கினை உச்ச நீதிமன்றம் திங்களன்று ஒத்திவைத்தது.
வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி கூறுகையில், ‘ இந்த வழக்கில் ஹைதராபாத் கூட்டு வன்புணர்வு – கொலை வழக்கில் செய்ததைப் போன்ற ஒன்றையே, என்கவுண்டர் தொடர்பாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க எண்ணுகிறோம்’ என்று தெரிவித்தார்.